தமிழகம் முழுவதும் உள்ள சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வழக்கமான நேரத்தை விட விரைவாக செய்ய வேண்டும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
வெளியான அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருந்துகள் சேமிப்பது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். அதில் மருந்துகளை சேமித்து வைத்திருக்கும் குளிர் பதனக் கிடங்குகள், மருந்தகங்கள், சேமிப்பு கிடங்குகளில் உரிய காற்றோட்ட வசதி இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
மேலும் அறையின் சுவர்களையொட்டி மருந்துகளை வைக்காமல் அதிலிருந்து சற்று தள்ளி வைக்க வேண்டும். மேலும் சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வழக்கமான நேரத்தை விட முன்னதாக தொடங்கி காலை 11 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும். இதன் மூலம் வெப்ப அலையால் தடுப்பூசியின் வீரியம் குறையாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும். இந்த நேரம் பொதுமக்கள், சுகாதாரத்துறை களப்பணியாளர்களுக்கும் உகந்த நேரமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.