தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் – ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு!
தமிழகத்தில் திமுக பொறுப்பேற்று 10 மாதங்கள் ஆகிவிட்டது, பழைய ஓய்வூதிய திட்ட வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை என்ற குரல்கள் வெடித்து கிளம்பி உள்ளன. அந்த வகையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு பெற்ற பிறகு, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக அளிக்கப்பட்டு வந்தது. இந்த பழைய ஓய்வூதிய திட்டம் மூலம் அரசு ஊழியர் உயிரிழந்த பிறகும்கூட, அவரது மனைவிக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டு தான் வந்தது. இதனிடையே, ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்பட்ட சில நிதி சிக்கல் காரணமாக பழைய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு, அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் அல்லலுக்கு ஆளாக்கிய அதிமுக ஆட்சிக் காலத்தில், 01.04.2003 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு – முக்கிய பதிவுகள்.!
இதில் ஆறு லட்சம் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைக்கப்பட்டனர். பங்களிப்பு ஒய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்தே இதை எதிர்த்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் 19 ஆண்டுகளாக நீண்டு வருகிறது. புதிய ஓய்வூதிய திட்டமானது, மாதமாதம் ஓய்வூதியம் வழங்காமல் பணி ஓய்வு பெறும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக வழங்கப்படும். இதனால்தான் அரசு ஊழியர்கள் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்கம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துள்ளது.
கேரளா, டெல்லி, ஆந்திர மாநிலங்களின் அரசுகள், வல்லுநர் குழுவின் அறிக்கையைப் பெற்று பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளன. எனவே தமிழக அரசும் அரசு ஊழியர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என பல தரப்பிலிருந்து தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தால் மீண்டும் பூகம்பம் வெடிக்கும் என இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டியக்க தேசிய செயற்குழு உறுப்பினர் அ. மாயவன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.