LPG சிலிண்டர் விலை முதல் Post Office வட்டி வரை – ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரப்போகும் புதிய மாற்றங்கள்!
ஏப்ரல் 1 முதல் புதிய நிதியாண்டு தொடக்கம் என்பதால் அதிகமான புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும். அந்த வகையில் LPG சிலிண்டர் விலை உயர்வு ,போஸ்ட் ஆபீஸ் வட்டி, ஆதார் – பான் இணைப்பு, கிரிப்டோ கரன்சிக்கு வரி, PF அக்கவுண்ட் வரி மாற்றம் என புதிய மாற்றங்கள் நிறைந்த விதிகள் ஏப்ரல் 1, 2022 முதல் அமலுக்கு வருகின்றன.
புதிய மாற்றங்கள்:
மார்ச் மாதம் நிறைவடையவுள்ளது. புதிய நிதியாண்டு ஏப்ரல் 1 முதல் தொடங்கும். இதனுடன் பல பெரிய விதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் புதுப்புது விதிமுறைகள், விலை உயர்வு உள்ளிட்டவை அமலுக்கு வரும். அதிலும் புதிய நிதியாண்டு தொடக்கம் என்றால் ஏராளமான புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும்.ஏப்ரல் மாதம் தொடங்க இன்னும் 1 மட்டும் உள்ளதால் அலுவலகங்களில் கணக்கு வழக்கு முடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிலிண்டர் விலை:
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை இதுவரை இல்லாதது போல புதிய உச்சத்தை எட்டியுள்ளது.குறிப்பாக சிலிண்டர் எரிவாயு விலை ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் உயர்த்தப்பட்டு வருகிறது.
இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாதம் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்திலும் சிலிண்டர் விலை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போஸ்ட் ஆபீஸ் வட்டி:
சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டம், தபால் அலுவலக டெபாசிட், மாத வருமானத் திட்டம் உள்ளிட்ட தபால் அலுவலக திட்டங்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வட்டித் தொகை ரொக்கமாக செலுத்தப்படாது. இதற்கான அறிவிப்பை தபால் துறை ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. இதற்கு பதிலாக வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கை வங்கிக் கணக்கு அல்லது தபால் அலுவலக கணக்குடன் இணைக்க வேண்டும்.இதன் மூலம் வட்டித் தொகை நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிற்கே செலுத்தப்படும். இந்த நடைமுறை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஆதார் – பான் இணைப்பு:
முக்கிய ஆவணமாக உள்ள ஆதார் கார்டு தற்போது அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் பான் கார்டு மூலம் அதிகமான மோசடிகள் நடைபெறுகிறது. அதை தடுப்பதற்கு, ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. எனவே ஆதார் எண்ணுடன் பான் கார்டை மார்ச் 31 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இணைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
PF அக்கவுண்ட்:
புதிய பிஎஃப் விதிகள் அடுத்த நிதியாண்டில் இருந்து அதாவது ஏப்ரல் 1, 2022 முதல் அமல்படுத்தப்படும். – ஆண்டுக்கு 2.5 லட்சத்திற்கு மேல் ஊழியர் பங்களிப்பிலிருந்து பிஎஃப் வருமானத்திற்கு புதிய வரியை அறிமுகப்படுத்த ஐடி விதிகளின் கீழ் ஒரு புதிய பிரிவு 9D சேர்க்கப்பட்டுள்ளது.
கிரிப்டோகரன்சிக்கு வரி:
கிரிப்டோ கரன்சி, பிட்காயின் போன்றவை வழக்கமாக நாம் பயன்படுத்தும் நாணயங்கள் / பணத்தாள்கள் போன்று நாம் தொட்டு உணர முடியாத ஒரு டிஜிட்டல் நாணயம். இதன் மதிப்பு சர்வதேசச் சந்தையில் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு 30% வரி விதிக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த 30% வரி வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.