தமிழகத்தின் இம்மாவட்டத்திற்கு மார்ச் 22ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவிலில் வரும் மார்ச் 22 ஆம் தேதியன்று குண்டம் திருவிழா நடைபெற இருப்பதால் ஈரோடு மாவட்டத்திற்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலின் சிறப்பு அம்சமான குண்டம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவில் விழாவில் கலந்துகொள்வர். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் கோவில்கள் எதுவும் திறக்கப்படவில்லை. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவுக்கு குறைய ஆரம்பித்துள்ளதால் கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் – மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!
கடந்த மார்ச் 7 ஆம் தேதியில் இருந்து பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மார்ச் 15 ஆம் தேதி அம்மன் சப்பரம் திருவீதி உலாவும், திருகம்பம் சாட்டுதலும் நடந்தது. வரும் மார்ச் 21 ஆம் தேதி தீக்குண்டம் வார்ப்பு விழாவும், 22ஆம்தேதி அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குண்டம் திருவிழாவை முன்னிட்டு வரும் மார்ச் 22 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்ணி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஏதேனும் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் அந்த தேர்வும் வழக்கம் போல நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார். மேலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார் நிலை கருவூலங்கள் குறைவான பணியாளர்களுடன் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுகட்ட மார்ச் 26 ( சனிக்கிழமை ) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. மேலும், மார்ச் 21, 22, 23 ஆகிய நாட்களில் பண்ணாரியம்மன் கோவிலின் குண்டம் மற்றும் மறுபூஜை நடக்க இருப்பதால் இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு, கோபி, கவுந்தப்பாடி, பவானி, சத்தியமங்கலம், புளியம்பட்டி, மைசூரு, நம்பியூர், பவானிசாகர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.