தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை தோறும் விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் தற்போது துவங்கி இருக்கும் புதிய கல்வியாண்டின் அனைத்து சனிக்கிழமைகளிலும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் அளித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
விடுமுறை அறிவிப்பு
கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் நேற்று (ஜூன் 13) முதல் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட 2 வருட இடைவெளிக்கு பிறகு மழலையர் வகுப்புகள் முதற்கொண்டு 10ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆரம்பித்துள்ளது. இப்போது, பள்ளிகள் துவங்கிய முதல் நாளான நேற்று மாணவர்கள் அனைவரும் உற்சாகமாக வருகை தந்திருந்தனர். இதற்கிடையில் வகுப்புகள் துவங்கிய ஒரு வாரத்திற்கு, மாணவர்கள் அனைவருக்கும் புத்தாக்க பயிற்சிகளை அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனுடன் 2022-23ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் காலை 9.10 மணிக்கு தொடங்கி மாலை 4.10 மணிவரை நடத்தப்பட இருக்கிறது. இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் சனிக்கிழமைகள் தோறும் விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை முன்னமே அறிவித்திருந்தது. இது குறித்த அறிவிப்பின் படி, ‘தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும். மற்றபடி சனிக்கிழமைகள் தோறும் விடுமுறை அளிக்கப்படும்.
ஆனால், இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படலாம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்புகளை பெற்றிருக்கும் நிலையில் இந்த வாரம் முதல் சனிக்கிழமை விடுமுறை அறிவிப்பு நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி வரும் ஜூன் 27ம் தேதி 11ம் வகுப்பு மாணவர்களுக்கும், ஜூன் 20ம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் மீண்டுமாக திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.