CBSE 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – 12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு!!
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் CBSE பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 4ம் தேதி முதல் நடைபெற இருந்த பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் 12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு ரத்து:
கொரோனா நோய்த்தொற்று அச்சம் காரணமாக கடந்த வருட மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. கடந்த கல்வியாண்டில் மாணவர்களின் நலன் கருதி ஆண்டு இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 4 முதல் நடைபெற உள்ளதாக அதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது.
TN Job “FB Group” Join Now
தற்போது கொரோனா 2வது அலை வேகமெடுத்து உள்ள நிலையில் பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டது. மேலும் பல மாநில முதல்வர்களும் மாணவர்கள் நலன் கருதி தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதினர். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ஜூலை 1 முதல் முழு அகவிலைப்படி – மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!!
அதன் முடிவில் நடப்பு கல்வியாண்டில் மே 4 முதல் தொடங்கி நடைபெற இருந்த CBSE 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மறுஅறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜூன் 1ம் தேதிக்கு பின்னர் கொரோனா பரவல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.