மார்ச் 28 முதல் அங்கன்வாடி மையங்கள் மீண்டும் திறப்பு – வழிகாட்டுதல்கள் வெளியீடு!
ஒடிசா மாநிலத்தில் வரும் மார்ச் 28ம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்க அனுமதி அளித்துள்ள அரசாங்கம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அங்கன்வாடி மையங்கள்
கொரோனா தொற்றால் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக மூடப்பட்டிருக்கும் அங்கன்வாடி மையங்களை இந்த மாதம் 28ம் தேதி முதல் மீண்டும் திறக்க ஒடிசா மாநில அரசு அனுமதி அளித்திருக்கிறது. இது குறித்து அனைத்து மாவட்டங்களுக்கும் ICDS மற்றும் SW இயக்குனர் அரவிந்த் அகர்வால் அனுப்பிய கடிதத்தில், ‘ஒடிசாவில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள் அடுத்த 25 நாட்களுக்கு காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை திறந்திருக்கும். இப்பள்ளிகளில் கொரோனா நெறிமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய கலெக்டர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
இனி 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நீக்கம்? மத்திய அரசு விளக்கம்!
இதற்கிடையில் ஒடிசாவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு திறக்கப்படும் அங்கன்வாடி மையங்களுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOP) வெளியிட்டிருக்கிறது. இருப்பினும், உள்ளூர் நிலவரத்தை பொறுத்து, அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறப்பது குறித்து முடிவு செய்யுமாறு அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இப்போது அங்கன்வாடி மையங்களுக்கு செல்ல முடியாத குழந்தைகளுக்கு, கூடுதல் சத்துணவுத் திட்டத்தின் கீழ் உணவப்பொருட்கள் அவர்களின் வீட்டு வாசலில் வழங்கப்படும் என்று அரசு வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 3 முதல் 6 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் செய்யப்பட வேண்டும் என்றும் நோய்த்தடுப்பு, சுகாதார சோதனைகள், ஊட்டச்சத்து மற்றும் சுகாதார கல்வி (NHEd) போன்ற அனைத்து ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (ICDS) தொடர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர குழந்தைகளை 20 வினாடிகள் கைகளை கழுவ அறிவுறுத்த வேண்டும் என்றும், அங்கன்வாடிகளில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறந்திருக்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும், மையங்களுக்குள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், வெளியாட்கள் நுழைவதை கட்டுப்படுத்த வேண்டும், அனைத்து அங்கன்வாடி பணியாளர்களும் முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.