2500 வீரர்களுடன் தமிழகத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, நாட்டின் பெருமை – அமைச்சர் பெருமிதம்!
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் தொடர் மூலம் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பெருமை என அமைச்சர் மெய்யநாதன் பேட்டி அளித்துள்ளார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி:
சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. வரும் ஜூலை 28ம் முதல் ஆகஸ்டு 10 வரை செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாய்ண்ட் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா, நார்வே, பிரான்ஸ், ஜெர்மனி, அர்ஜென்டினா, ஸ்பெயின் உள்பட 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பில் மொத்தமாக 30 வீரர் மற்றும் வீராங்கனைகள் களம் காண உள்ளனர்.
TNPSC Group 4 தேர்வு விடைக்குறிப்பு 2022 – முழு விவரங்களுடன் !
அதில் தமிழகத்தைச் சேர்ந்த 7 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கு ஆலோசகராக செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு வெகு விமரிசையாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் ஒத்திகை போட்டி தொடங்கியது. ஒத்திகை போட்டியை அமைச்சர்கள் மெய்யநாதன், தா.மோ, அன்பரசன், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. சில சோதனைகள் மட்டுமே செய்ய வேண்டிய தேவை உள்ளது. அது நாளை முதல் தொடங்கும். மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த மற்ற நாடுகளுக்கு போதுமான கால அவகாசம் கொடுக்கப்படும். ஆனால் தமிழக அரசுக்கு போதுமான கால அவகாசம் இல்லை.
ஆனாலும் 4 ஆண்டுகளாக செய்யப்பட வேண்டிய பணிகளை, வெறும் 4 மாதங்களில் தமிழக அரசு முடித்து காட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் சர்வதேச வீரர்கள் சென்னை வரத் தொடங்கியுள்ளனர். இவர்களுக்காக தனியார் விடுதி, ஓட்டல்களில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.