ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனா மூன்றாவது அலை தடுப்பு நடவடிக்கைகளாக முழு ஊரடங்கு உத்தரவை ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில கூடுதல் செயல்பாடுகளுக்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்திருப்பதற்கு மத்தியில், 3 ஆம் அலையை எதிர்கொள்ளும் விதமாக மாநிலங்கள் தோறும் ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் உத்தரகண்ட் மாநிலத்திலும் வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த படி தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு, இன்று (ஆகஸ்ட் 10) காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி காலை 6 மணி வரை அமல்படுத்தப்படும் என்று அரசாங்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், சுற்றுலா இடங்களுக்கு வரும் பார்வையாளர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஊரடங்கு காலத்தில், மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இறுதிச் சடங்குகளில் அதிகபட்சமாக 50 பேர் கலந்துகொள்ள மாநில அரசு அனுமதித்துள்ளது.
இதற்கு முன்னதாக அம்மாநிலத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் நீட்டித்தது. இந்த கட்டுப்பாடுகள் இன்றுடன் (ஆகஸ்ட் 10) முடிவடைந்ததால், இவை மேலும் ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. தவிர ஆகஸ்ட் 16 முதல் 6 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.