ஜூன் மாதம் திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – சிறப்பு டோக்கன் வழங்கும் தேதி அறிவிப்பு!
கோடை விடுமுறை அனைத்து மாநிலங்களிலும் அறிவிக்கப்பட்டு உள்ளதால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நுழைவு தரிசனத்தை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது. மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தரிசன அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டோக்கன் வழங்கும் தேதி அறிவிப்பு:
உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது தொற்று பரவல் கணிசமாக குறைந்து விட்டதால் பல்வேறு சேவைகளுக்கு தேவஸ்தானம் படிப்படியாக அனுமதி அளித்து வருகிறது. இந்நிலையில் ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு படையெடுத்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் வசதியை முன்னிட்டு 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்த வண்ணம் உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர்கள் செல்வதற்கான சிறப்பு நுழைவு வாயில் வழியே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா அச்சம் காரணமாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தரிசனம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏழுமலையானை தரிசிக்க மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நுழைவு தரிசனத்தை மீண்டும் வழங்க அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. தற்போது வரும் ஜூன் மாதம் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் முன்னுரிமை அடிப்படையில் ஏழுமலையானை தரிசிக்க தேவையான டோக்கன்கள் இந்த மாதம் 26 ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இது குறித்து தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில், இம்மாதம் 26 ஆம் தேதி முதல் தேவஸ்தான இணையதளத்தில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகிய பக்தர்கள் தங்களுக்கான தரிசனத்திற்கு உரிய டோக்கன்களை முன்பதிவு செய்து ஜூன் மாதம் இலவசமாக ஏழுமலையானை வழிபடலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தினந்தோறும் 1000 பக்தர்கள் இந்த சிறப்பு தரிசனத்தில் அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும் டோக்கன் பெற்ற பக்தர்கள் தினமும் காலை 10 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதை அடுத்து வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை 3 மணி முதல் ஏழுமலையானை வழிபட அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.