கவலையில் தமிழக மக்கள்.. முதல் நாளே பொங்கல் பரிசு வழங்குவதில் சிக்கல் – அதிருப்தியில் இல்லத்தரசிகள்!
தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வழங்க இருந்த பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்திற்கான பணிகள் இன்று தொடங்கி உள்ள நிலையில், சர்வர் பிரச்சனை காரணமாக விநியோக பணிகள் ஸ்தம்பித்து உள்ளது.
சர்வர் பிரச்சனை:
தமிழக அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் அரசு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை ஜனவரி 9ம் தேதியான இன்று முதல் தொடங்க இருப்பதாக முன்னதாக அறிவித்தது. இதற்காக கடந்த ஜனவரி 3ம் தேதி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் டோக்கன்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், பொங்கல் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப்பணம் ஆகியவை வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள் அதை கண்டிப்பாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை தொடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகள் அனைத்தும் சர்வர் பிரச்சனை காரணமாக ஸ்தம்பித்து விட்டது.
டோக்கன் படி அதிகாலை முதல் வரிசையில் காத்து கொண்டிருக்கும் பொது மக்கள், மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். மேலும், ஒரு சில இடங்களில் வயது முதிர்ந்தவர்களுக்கு கை ரேகையும் பதிவாகவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளது. இதனால் இந்த விவகாரத்தை தமிழக அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.