PM KISAN பயனாளிகளுக்கு கெடுபிடி – தொகையை திரும்ப வழங்க உத்தரவு! 6 லட்சம் ரூபாய் வரை வசூல்!
பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் தகுதியற்ற விவசாயிகளும் இணைந்து நிதியுதவி பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளது. இதன் பேரில் நிதியுதவி பெறுபவர்களைக் கண்டுபிடித்து அவர்களிடமிருந்து தவணை தொகைகளை திரும்ப வாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது
கிசான் திட்டம்:
விவசாயிகளின் பொருளாதார நிலை மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகை நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2 ஆயிர ரூபாய் வீதம் விவசாயிகளின் கணக்கிற்கு தவணையாக அனுப்பப்படுகிறது. தற்போது இந்த திட்டத்தின் 10 தவணைகள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் விவசாயிகள் 11வது தவணைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் தகுதியில்லாத பலர் இதனை பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்து உள்ளது.
Exams Daily Mobile App Download
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் சுமார் 3.15 லட்சம் தகுதியற்ற பயனாளிகள் நிதியுதவி பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்திய அரசு விசாரணை நடத்தியபோது, உ.பி.யில் உள்ள பண்டேல்கண்டின் பண்டா மாவட்டத்தில் மொத்தம் சுமார் 2 லட்சத்து 62 ஆயிரம் விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். அதில் 2105 விவசாயிகள் தகுதியற்றவர்கள் என்று கண்டறியப்பட்டது. இந்த திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் படி வருமான வரி செலுத்தும் விவசாயிகள் இதற்கு தகுதியற்றவர்கள். இப்போது இந்த 2105 விவசாயிகளுக்கும் பணத்தை திருப்பித் தருமாறு வேளாண் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் 73 விவசாயிகள் சுமார் ரூ.6 லட்சத்தை அரசிடம் திருப்பி அளித்துள்ளனர்.
இன்னும் பணத்தை திரும்ப தராத மீதமுள்ள விவசாயிகளுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்படும் என வேளாண் இணை இயக்குநர் விஜய் குமார் சிங் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் நிறுவன விவசாயிகள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் போன்றோர் இணைய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.