முழு ஊரடங்கு உத்தரவு (மே 8 ) நாளை வரை நீட்டிப்பு – மாநில அரசு திடீர் அறிவிப்பு!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரம்ஜானையொட்டி கொடி, பேனர் மற்றுமு் ஒலிபெருக்கி பொருத்துவது தொடர்பாக இருபிரிவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மோதல் தீவிரமடைந்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது, தற்போது இந்த ஊரடங்கு நாளை (மே 8) நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது
நாளை வரை ஊரடங்கு நீட்டிப்பு:
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரம்ஜான் பண்டிகையின்போது கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கற்களை வீசி கொண்டு தாக்குதல் நடத்தினர். இதை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், எல்லை மீறி சென்ற மோதலை கட்டுப்படுத்த தடியடி நடத்தினர். மேலும் கண்ணீர் புகை குண்டுகள் வீசி அவர்களை விரட்டியடித்தனர். இதை அடுத்து அந்த பகுதி முழுவதையும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இருப்பினும் தொடர்ந்து நடந்த கல்வீச்சு தாக்குதலால், 5 போலீசார் காயமடைந்தனர்.
சமூக வலை தளங்களில் இந்த வன்முறை தாக்குதல் குறித்து வதந்திகள் பரவியதால், அதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜோத்பூர் மாவட்டம் முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டது. தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருந்தாலும் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகிறது. இதற்கிடையில் ஜோத்பூரின் உதய் மந்திர், நகோரி கேட், கந்தா பல்சா, பிரதாப் நகர், தேவ் நகர், சூர் சகர் மற்றும் சர்தர்புரா ஆகிய போலீஸ் நிலைய கட்டுப்பாட்டு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவை (மே 8) நாளை நள்ளிரவு வரை நீட்டித்து மாவட்ட காவல் ஆணையாளர் இன்று உத்தரவிட்டு உள்ளார்.
இந்த ஊரடங்கு காரணமாக ஜோத்பூர் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.இருப்பினும் நேற்று காலை 8 மணி முதல் இரண்டு மணி நேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டு ஜோத்பூர் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேர்வுக்கு செல்ல கூடிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் ஊரடங்கில் இருந்து விலக்களிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மருத்துவ சேவை, வங்கி அதிகாரிகள், நீதிமன்ற அதிகாரிகள் மற்றும் ஊடக பணியாளர்களுக்கு விலக்களிக்கப்பட்டு உள்ளது.
சம்பந்தப்பட்ட உதவி காவல்துறை ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி முக்கிய தேவைகளுக்கு மட்டும், ஊரடங்கு உத்தரவின் போது வெளியே செல்ல அனுமதி வழங்க முடியும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வன்முறை காரணமாக இதுவரை 211 பேர் வரை கைது செய்யப்பட்டு உள்ளனர் மற்றும் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் டி.ஜி.பி. லாதர் கூறியுள்ளார்.