தமிழகத்தில் ஜன.9ம் தேதி முழு ஊரடங்கு, கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை – முக்கிய அறிவிப்பு!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்திராவின்படி நேற்று முதல் இரவு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை 9ஆம் தேதி முழு ஊரடங்கு அன்று சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை விடப்படுவதாக கோயம்பேடு காய்கறி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் தெரிவித்துள்ளார்
கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,900-க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அதிக அச்சத்தில் உள்ளனர். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பொது மக்கள் நலன் அடிப்படையில் 6-ம் தேதி முதல் தினமும் இரவு ஊரடங்கு (இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) மற்றும் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். முதல்வர் அறிவிப்பின் படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இரவு ஊரடங்கை மீறுபவர்களை கண்காணிக்க போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவு ஊரடங்கின் போது தேவையில்லாமல் வெளியே செல்லக்கூடாது, அதனை மீறுபவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து முழு ஊரடங்கு அன்று, பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ATM கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்ந்து போன்ற மருத்துவம் சார்ந்த பணிகள் போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, சென்னையில் கோயம்பேடு சந்தையில் வாரம்தோறும் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் முழு ஊரடங்கு தினத்தன்று கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை விட அனைத்து வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மற்றும் மற்றும் அரசு அறிவுறுத்தல் படி வரும் 9-ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை விடப்படுவதாக கோயம்பேடு காய்கறி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் தெரிவித்துள்ளார். இந்த வகையில் இனி வரும் நாட்களில் கோயம்பேடு சந்தைக்கு வருவோர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும், அப்படி அணியாமல் வருபவர்கள் வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவித்துள்ளார்.