சென்னை மாநகர இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு – போக்குவரத்து காவல்துறை உத்தரவு!
தமிழகத்தில், சென்னை மாநகரில் சாலை விபத்துகளில் இறப்பவர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, இன்று (மே23) முதல் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டுநர் மற்றும் வாகனத்தின் பின்னால் அமர்ந்து வருபவர் என இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை உத்தரவு:
தற்போதைய அவசர உலகில், நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. மறுபுறம் வாகன விபத்துகளும் அதிகரிக்கின்றன. இதனால் பலர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதே உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்பவரும், பின்னால் அமர்ந்து இருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாய உத்தரவாக உள்ளது. மேலும் ஹெல்மெட் அணிவதால், பலரின் உயிர் பாதுகாக்கப்படுகிறது. ஹெல்மெட் அணிவது ஒவ்வொருவரின் கடமை என்பதை வாகன ஓட்டிகள் உணர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்தியாவில் அதிக அளவில் சாலை விபத்துகள் பதிவாகும் மாநிலங்களின் வரிசையில், தமிழகம் முதல் அல்லது இரண்டாவது இடத்தில் நீடித்து வருகிறது. தினமும் இறப்புகள் பதிவாகின்றன என்ற தகவல் கவலை தருகிறது. மேலும் ஹெல்மெட் இருவருக்கும் கட்டாயம் என்ற விதி பல ஆண்டுகளாக இருந்தாலும், பின்பற்றுபவர்கள் குறைவாக உள்ளனர். சமீப காலங்களில் சென்னை நகரத்தில் அதிகரித்துவரும் இருசக்கர வாகன ஓட்டிகளின் இறப்புகளை கருத்தில் கொண்டு, தலைக்கவசம் இருவருக்கும் கட்டாயம் என்பதை உறுதிப்படுத்த சாலைகளில் ஆய்வுகள் நடத்தப்படும் என்றும், விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சரட்கர் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் இன்று முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டம் 1988 இன் பிரிவு 129ன் படி, இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்கிறார். எனவே சென்னை முழுவதும் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் பைக்கின் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாத 367 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 1,278 வழக்குகள் இன்று மட்டும் பதியப்பட்டுள்ளதாகவும், மேலும் அவர்களுக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.