தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்?
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். மேலும் காலை சிற்றுண்டியை முடிப்பதற்கு ஏதுவாக பள்ளி நேரத்தை பாதிக்காத வண்ணம் வேலை நேரம் மாற்றப்படும் என்று கூறப்பட்டது. மேலும் இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் தெரிவித்துள்ளார்.
நேர மாற்றம்
தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கால அட்டவணையில் அறிவித்தபடி பொதுத்தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இதையடுத்து 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றுடன் பள்ளி வேலை நாள் நிறைவடைந்துள்ளது. மேலும் இவர்களுக்கு நாளை முதல் ஜூன் 12ம் தேதி என ஒரு மாத காலத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டு வருகிற ஜூன் 13ம் தேதி முதல் தொடங்கப்படும். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில், அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நாட்களில் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தை முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செயல்படுத்த உள்ளதாகவும் அறிவித்தார். அதன்பின் இத்திட்டம் தமிழகம் முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் காலை சிற்றுண்டியை முடிப்பதற்கு 30 நிமிடங்களாவது தேவைப்படும் என்பதால் பள்ளி மாணவர்கள் முன்கூட்டியே பள்ளிகளுக்கு வர வேண்டியிருக்கும். அத்துடன் பள்ளி வேலை நேரத்தை பாதிக்காத வண்ணம் பள்ளி நேர மாற்றம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது.
மேலும் பள்ளிகளில் நேரம் மாற்றம் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, மாணவர்கள் காலை சிற்றுண்டியை உண்பதற்காக பள்ளி வேலை நேரத்தை மாற்றுவது குறித்து இன்னும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படவில்லை என்றும் இது குறித்து முதல்வருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். அத்துடன் பள்ளிகளில் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்தால் அவர்களின் TC மற்றும் Conduct Certificateயில் அவர்கள் மீது எந்த காரணத்திற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைக் குறிப்பிட்டு பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்று அண்மையில் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இவர் இது குறித்து கூறியதாவது, மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் போது அவர்களுக்கு எடுத்த எடுப்பிலேயே TC வழங்கப்படாது. நிலைமை அத்துமீறி சென்றால் தான் TC வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.