ஊர்க்காவல் படையில் உள்ள காலிப்பணியிடங்களில் பணிபுரிய ஆர்வம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஊர் காவல் படை:
திருவண்ணாமலை மாவட்டம் ஊர் காவல் படையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதன்படி திருவண்ணாமலை மாவட்ட ஊர்க்காவல் படையில் தற்போது 6 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் என்று 11 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆரணி காவல் உள்கோட்டத்துக்கு உட்பட்ட அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தன்னார்வ தொண்டு செய்ய விருப்பமுள்ளவர்கள், சேவை மனப்பான்மை கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்கு ரூபாய் 560 ஊக்க தொகையாக ஒரு நாள் வீதம் மாதம் ஐந்து நாட்களுக்கு பணி வழங்கப்படும்.
விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் ஆரணி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உரிய விண்ணப்பங்களை பெற்று முறையாக பூர்த்தி செய்து புகைப்படம் மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் அலுவலகத்தில் புதன்கிழமை, பிப்ரவரி 7 ஆம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு நேர்காணலுக்கு தகுதியான நபர்கள் அழைக்கப்படுவார்கள். இப்பணி தொடர்பான மேலும் கூடுதல் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 9498100437 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.