தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தில் ரூ.92 கோடியே 74 லட்சம் மதிப்புள்ள நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் அதனால் 23 ஆயிரத்து 599 பேர் பயன்பெற்று உள்ளதாக கலெக்டர் மதுசூதன் ரெட்டி அறிவித்து உள்ளார்.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் திமுக அரசு தங்களது தேர்தல் வாக்கு உறுதியில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியுள்ளனர். மேலும் அவர்கள் ஆட்சிக்கு வந்த உடன் அந்த திட்டத்தை அமல்படுத்தி விட்டனர். அந்த வழிகாட்டுதலின்படி, தகுதியான பயனாளிகளை தேர்வு செய்திட தமிழக அரசின் சார்பில் குழு அமைக்கப்பட்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நமது மாவட்டத்திற்கு வந்து கள ஆய்வு மேற்கொண்டு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்துள்ளனர்.
தமிழகத்தில் மார்ச் 28, 29ம் தேதிகளில் அரசு பேருந்துகள் இயக்கம் நிறுத்தம்? அமைச்சர் விளக்கம்!
இந்நிலையில் சென்ற 18 ஆம் தேதி சட்டசபையில் நிதி அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் 2022-2023 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதனால் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அதில் முக்கிய ஒன்றாக நகை கடன் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதாவது, 5 சவரனுக்கு குறைவாக கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் வைத்தவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவ்வாறு அரசு எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவரில் இருந்து அவையில் இருந்த பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு தள்ளுபடி சான்றிதழ்கள் மற்றும் நகைகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். கூட்டுறவு இணை பதிவாளர் ஜீனு முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்டு பேசிய ஆட்சியர் 166 கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்ற 23 ஆயிரத்து 599 பேருக்கு ரூ.92 கோடியே 74 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அதற்குரிய சான்றிதழ்களும், நகைகளும் உரியவர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் அவர்கள் அந்த கூட்டுறவு நிறுவனத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.