தமிழகத்தில் ஆவின் நெய், வெண்ணைக்கு கடும் தட்டுப்பாடு – காரணம் என்ன? அதிகாரி விளக்கம்!
சென்னை உள்ளிட்ட சில ஆவின் பாலகங்களில் ஆவின் நெய், வெண்ணை போன்ற பொருட்கள் கிடைக்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஆவின் நெய்:
தமிழக அரசின் ஆவின் நிர்வாகம் நாளொன்றுக்கு சுமார் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. அத்துடன் பால் சார்ந்த பொருட்களான தயிர், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களும் ஆவின் பாலகங்களில் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சில நாட்களாக ஆவின் நெய் வெண்ணெய் போன்ற பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
அதாவது 200 மற்றும் 500 கி நெய் பாட்டில்கள் கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர். இது குறித்து பேசிய ஆவின் பாலக உரிமையாளர்கள் ஆவின் நிர்வாகத்தின் பால் கொள்முதல் தற்போது குறைந்துள்ளது. அதனால் பாலில் இருந்து செய்யப்படும் வெண்ணெய், நெய் போன்ற பொருட்கள் வருவதில்லை என்று கூறுகின்றனர். இந்நிலை குறித்து ஆவின் நிர்வாக அதிகாரியிடம் கேட்ட போது,தற்போது பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது இன்னும் ஓரிரு நாட்களில் மக்களுக்கு வழக்கம் போல ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என கூறினார்.