மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா – முழு ஊரடங்கு அமல்! அதிர்ச்சியின் உச்சத்தில் பொதுமக்கள்!
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக சீனாவின் ஜிலின் பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். இந்த தினசரி பாதிப்பு மேலும் அதிகரிருக்குமே என்ற அச்சத்தில் சீன மக்கள் உள்ளனர்.
முழு ஊரடங்கு அமல்:
உலகையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முதன் முதலில் தோன்றியது சீனாவில்தான். அங்குள்ள உகான் நகரில் உருவான இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த கொடிய வைரஸ் ஒவ்வொரு அலையாக உலக நாடுகளை கதி கலங்க வைத்துள்ளது. இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவது உலக சுகாதார துறைக்கு பெரிய சவாலாக இருந்தது. ஆனால் சீனா கொரோனாவின் முதல் அலையின் போது முழு ஊரடங்கு, பயணக் கட்டுப்பாடு, அதிக அளவு பரிசோதனை உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி நோய்த் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தது.
CBSE 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!
அந்த நிலையில் மற்ற நாடுகளில் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவை போல மற்ற நாடுகளும் கடுமையான தடுப்பு விதிமுறைகளை அமல்படுத்தியது. அதன் பலனாக தற்போது நிலைமை சீராகி வருகிறது. இருப்பினும் தற்போது கொரோனா பிறப்பிடமான சீனாவில் புதிய வகை கொரோனாவால் கடந்த சில வாரங்களாக தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையை சீனா கையாண்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து சீனாவில் தற்போது கொரோனா பாதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டி உள்ளது.
இதன் எதிரொலியாக சீனாவின் பல்வேறு வடகிழக்கு நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 45 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஜிலின் நகரில் தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், நகரம் முழுவதும் முடக்கப்பட்டு உள்ளது. நகரில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. அதிகமான மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதையடுத்து தனிமைப்படுத்துதல் தொடர்பான புதிய வழிகாட்டு விதிமுறைகளையும் அமல்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து சுமார் 7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஷாங்காய் நகரிலும் கொரோனா தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஹாங்காங் எல்லைக்கு அருகில் உள்ள ஷென்சென் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு மாகாணங்களில் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.