தமிழகத்தில் முதல் முறையாக சர்வதேச பட்டம் விடும் திருவிழா – இணையத்தில் நுழைவுச்சீட்டு!
தமிழ்நாட்டில் முதல் முறையாக மாமல்லபுரத்தில், வரும் 13-ஆம் தேதி (நாளை) முதல் 15ம் தேதி வரை சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடைபெற உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த திருவிழாவில் அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குழுக்கள் பங்கேற்க உள்ளனர்.
பட்டம் விடும் திருவிழா:
குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா இதுவரை நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது முதல் முறையாக தமிழகத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக தமிழக சுற்றுலாத் துறை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் முதல்முறையாக செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 13ம் தேதி சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடங்க உள்ளது. சுற்றுலாத் துறை மூலம் நடத்தப்படும் இந்த விழாவை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுற்றுலா துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் நாளை தொடங்கி வைக்கின்றனர்.
இந்த பட்டம் விடும் திருவிழா நாளை முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இதில் வெளிநாடுகளில் இருந்து 4 குழுக்கள், இந்தியாவில் இருந்து 6 குழுக்கள் என மொத்தம் 10 குழுக்கள் கலந்து கொள்கின்றன. விழா மதியம் 12 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் பட்டம் விடும் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சுற்றுலாத் துறை இயக்குநர் சந்திப் நந்தூரி நேற்று பார்வையிட்டார். பட்டம் பறக்கவிடப்பட உள்ள பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை அவர் ஆய்வு செய்தார். இந்த திருவிழாவில் பல்வேறு விலங்குகள், மீன்கள், பறவைகள் போன்றவை பலூன் வடிவில் பட்டங்களாக பறக்க விடப்பட உள்ளன.
Exams Daily Mobile App Download
தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
சுற்றுலா துறைக்கு சொந்தமான கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் நடைபெறும் இந்த விழாவுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக விறக்கப்படுகின்றன. இந்த பட்டம் விடும் திருவிழாவில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம் எனக் கூறப்படும் நிலையில், சிறுவர்களை இலவசமாக அனுமதிக்கவும், பெரியவர்களுக்கு ரூ. 150 கட்டணம் வசூலிக்கவும் சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது. இந்த திருவிழாவின்போது இசைக்கச்சேரிகள், உணவு திருவிழா போன்றவையும் நடைபெறும் எனவும், பொதுமக்களுக்கு இது சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக திகழும் எனவும் சுற்றுலாதுறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சிக்கு www.tnikf.com என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து நுழைவுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.