மே மாதம் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் – கொரோனா பரவல் எதிரொலி!
உத்தரபிரதேச மாநிலத்தின் கவுதம் புத் நகரில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகளை கவனத்தில் கொண்டு மே மாதம் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
தடை உத்தரவு
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா புதிய பாதிப்புகள் அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு மக்கள் பொது இடங்களில் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஏனென்றால் கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிற்பாடு, நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தற்போது 3 ஆயிரத்தை தாண்டி பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த பாதிப்புகளை கருத்தில் கொண்டு மே 31 வரை உத்தரபிரதேசத்தின் கவுதம் புத் நகரில் 144வது பிரிவின் கீழ் தடை நடவடிக்கைகள் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து கெளதம் புத் நகரின் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, ‘மாவட்டம் முழுவதும் தற்போது காணப்பட்டு கொண்டிருக்கும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு மே 1 முதல் மே 31ம் தேதி வரை 144வது பிரிவின் கீழ் தடை உத்தரவு விதிக்கப்படுகிறது. இந்த தடை காலங்களில் உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி யாரும் போராட்டங்களை நடத்த அனுமதிக்கக் கூடாது. பொது இடங்களில் பூஜை மற்றும் நமாஸ் வழங்குவது அனுமதிக்கப்படாது. பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிகளில் நடைபெறும் தேர்வுகளின் போது சமூக இடைவெளியை சரியான கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களுடன் பராமரிக்க வேண்டும். தவிர தேர்வு மையங்களின் வளாகம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வரவிருக்கும் திருவிழாக்கள் மற்றும் கொரோனா வழக்குகளின் அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தவிர கொரோனா தொற்றுநோய்க்கான வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.