ஜனாதிபதி தேர்தலில் திரௌபதி மூர்மு வெற்றி – ஜூலை 25ல் பதவி ஏற்பு!
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி பெற்றுள்ளார். வரும் 25ம் தேதி நாட்டின் 15வது ஜனாதிபதியாக அவர் பதவியேற்க உள்ளார். மேலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திரவுபதி முர்மு வெற்றி:
இந்தியாவின் குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் அடிப்படையில் நாட்டின் 15வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. மேலும் ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. முதலில் பாராளுமன்ற ஓட்டுப் பெட்டியில் இருந்த வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 748 எம்.பி.க்களில் திரவுபதி முர்மு 540 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார். மேலும் யஷ்வந்த் சின்கா 208 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்று பின் தங்கினார். அதன்பின்னர் எம்எல்ஏக்கள் பதிவு செய்த வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
இதையடுத்து 20 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், மெஜாரிட்டிக்கு தேவையான வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற்றார் முர்மு. தொடர்ந்து 3 வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திரவுபதி முர்மு 50 சதவீத வாக்குகளை கடந்ததால் அவர் ஜனாதிபதியாக தேர்வாகி இருப்பது உறுதியானது. அதன் பின்னர் மீதமுள்ள மாநிலங்களின் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி பி.சி.மோடி அறிவித்தார்.
தமிழகத்தில் ஜூலை 26 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!
அதாவது திரவுபதி முர்மு 6,76,803 வாக்குகளும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 3,80,177 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில் திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் யஷ்வந்த் சின்ஹாவுக்கு 36 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் நாட்டின் 15 வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு வரும் 25ம் தேதி பதவியேற்க உள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். திரவுபதி முர்மு வெற்றி பெற்றதால், இந்திய வரலாற்றில் முதல் முறையாக பழங்குடியின பெண் ஒருவர், ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக பிரதீபா பாட்டீல் இருந்தார். தற்போது, 2வது பெண் ஜனாதிபதியாக முர்மு பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.