‘குக் வித் கோமாளி’ சீசன் 3 இல் இருந்து விலகும் கோமாளி பரத்? வெடித்த புதிய சர்ச்சை! ரசிகர்கள் விமர்சனம்!
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சி துவங்கிய ஆரம்பத்திலேயே சில சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறது. அந்த வகையில் கோமாளி பரத்தின் நகைச்சுவைகள், நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது ரசிகர்களிடையே விமர்சனங்களை பெற்று வருகிறது.
கோமாளி பரத்
கடந்த 2 சீசன்களாக சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் 3வது சீசன் கடந்த வாரத்தில் இருந்து துவங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடு அதாவது லான்ச் எபிசோடு கடந்த 23ம் தேதியன்று வெளியாகி எக்கச்சக்க வரவேற்புகளை பெற்றிருக்கிறது. குறிப்பாக மற்ற 2 சீசன்களிலும் இல்லாத ஒரு நிகழ்வாக இந்த ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் இம்முறை 10 போட்டியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அதாவது நடிகை ரோஷினி, சந்தோஷ், மனோபாலா, அந்தோணி தாசன், வித்யுலேகா, அம்மு அபிராமி, தர்ஷன், கிரேஸ் கருணாஸ், ராகுல் தாத்தா என மொத்தம் 10 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். அதே போல கோமாளிகளிலும் புதிதாக 5 பேர் இடம்பிடித்துள்ளனர். பொதுவாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் சமயலை விட கோமாளிகள் தான் அதிக கவனம் ஈர்ப்பது வழக்கம். அந்த வகையில் இந்த சீசனில் புதிதாக அறிமுகமாகி மக்களின் கவனம் ஈர்த்திருந்தது கோமாளிகள் குரேஷி மற்றும் பரத்.
இப்படி இருக்க இந்த சீசனின் அறிமுக நிகழ்ச்சியில் ஏற்பட்ட சில கலாட்டாக்கள் சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. அதாவது, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட், பரத், குரேஷி ஆகியோரை அடித்திருந்தது சர்ச்சையை கிளப்ப இது குறித்து செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் பரத் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் புதிய கோமாளியாக களமிறங்கி இருக்கும் பரத்தின் நடவடிக்கைகள் ரசிகர்களை சற்று முகம் சுளிக்க வைத்திருக்கிறது.
அதாவது, சமையல் செய்யும் போது கத்திரிக்காயா இது என்பது போல சொல்வது, சக போட்டியாளர்களை மாமா என்று அழைத்தது, போட்டியாளர்களுக்கு கை கொடுத்தது, வித்தியாசமாக பேசியது ஆகிய அனைத்தும் சர்ச்சைக்குள்ளாக தயவு செய்து பரத்தை நீக்குங்கள், விஜய் டிவியில் காமெடியனுக்கு பஞ்சம் வந்துவிட்டதா என்று சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இருந்தாலும் பரத் கேரளாவை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு தமிழ் வார்த்தைகள் சரியாக தெரியாது என்று அவருக்கு ஆதரவாக சிலர் குரல் எழுப்பியுள்ளனர்.