தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் திட்டம்? கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி!
தமிழகத்தின் கள்ளக்குறிச்சி சம்பவத்தின் எதிரொலியாக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு என்று விரைவில் கவுன்சிலிங் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை:
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த மாணவியின் உயிரிழப்பு மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு மாணவர்களுக்கு பல அறிவுரைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. மாணவர்களுக்கு மட்டுமின்றி தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, தனியார் பள்ளிகள் மாணவர்களை கட்டாயப்படுத்தி பாடங்களை திணிக்க கூடாது என்று அறிவுரை வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி மாணவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் தைரியமான மனநிலையோடு இருக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
IBPS தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
அந்த வகையில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் திட்டம், மாணவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் உறுதியாக இருக்கும் விதமாக விளையாட்டு போட்டிகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதை தவிர மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள், தன்னம்பிக்கை வளர்க்கும் நிகழ்ச்சிகளை நடத்தி வெற்றி பெறுபவர்களை வெளிநாடு அழைத்து செல்லும் திட்டம் குறித்து பல முன்னெடுப்புகளை நடத்தி வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் மாணவ மாணவிகளின் நலன் கருதி அரசாங்கம் கூறியுள்ள திட்டங்களை எப்படி நடைமுறை படுத்துவது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. அதாவது மாணவர்கள் மன அழுத்தத்தின் காரணமாகவே விபரீத முடிவுகளை எடுக்கின்றனர் என்றும் அவர்களை விளையாட்டு துறைகள் மீது கவனத்தை செலுத்த வைப்பதன் மூலம் அவர்களுக்கு புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஒன்றியத்திலும் 2 மருத்துவர்கள் என நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.