இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – நேற்று ஒரே நாளில் 7,240 பேருக்கு தொற்று உறுதி!
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,240 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய சுகாதாரத்துறை தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா பரவல்:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று பேரதிர்வுகளை ஏற்படுத்தியது. முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடியது. மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்கள் டெல்டா பிளஸ் வைரசால் பெரும் சிரமத்திற்கு உள்ளானது. இதனால் மாநில அரசுகள் செய்வதறியாமல் தவித்தனர். இந்த நேரத்தில் அரசு நோய்த் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி தொற்று பரவலை குறைக்க முற்பட்டது.
அதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டது. இதன் விளைவாக கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வந்தது. இதனால் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. மக்களும் இயல்பான வாழ்க்கையை நோக்கில் திரும்பி வந்தனர். இந்த நேரத்தில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,240 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நான்காம் அலை பாதிப்பாக இருக்க கூடுமோ என்று மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 7,000 ஐ தாண்டி உள்ளது. நாட்டின் மொத்த பாதிப்பு 4 கோடியே 31 லட்சத்து 97 ஆயிரத்து 522 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 11,263, மகாராஷ்டிராவில் 9,806 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியா முழுவதும் இதுவரை 194 கோடியே 59 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 15,43,748 பேர் செலுத்தி கொண்டுள்ளனர்.