தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
கேரளாவில் பருவமழை பெய்ய தொடங்கி உள்ளதால், தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை ( ஜூன் 2) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பலத்த மழைக்கு வாய்ப்பு:
நாடு முழுவதும் வேளாண்மை மற்றும் குடிநீர் தேவைக்காக எதிர்பார்க்கப்படும் தென்மேற்கு பருவமழை, முன்கூட்டியே கேரளாவில் தொடங்கியது. இயல்பை விட மூன்று நாட்கள் முன்னதாகவே மழை துவங்கி உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நம் நாட்டில், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கான நீராதாரங்களை நிரப்பும் முக்கிய மழை பருவமாக, தென்மேற்கு பருவமழை கருதப்படுகிறது. இதன் காரணமாக, கேரளா மற்றும் அதையொட்டிய தமிழக பகுதிகளில், பருவமழை பெய்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த அறிக்கையில், தென் தமிழகம் மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவி உள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மேலும் மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று, தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை பலத்த காற்று மேற்கண்ட பகுதியில் வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
அதன்படி, நேற்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்தது. மேலும் இன்றும் தமிழகத்தில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருப்பத்தூர், மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல, நாளை 3-ம் தேதியும், நாளை மறுதினம் 4-ம் தேதியும் தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.