மத்திய அரசின் PM KISAN திட்டம் – 11வது தவணை பெற இது கட்டாயம்! எளிய வழிமுறைகள் இதோ!
மத்திய அரசு விவசாயத்திற்கென்று பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பிஎம் கிசான் திட்டத்தில் ஆண்டுக்கு 3 தவணையாக ரூ. 2000 என மொத்தமாக ரூ.6000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 10 தவணை வரை உதவித்தொகை வரை வழங்கப்பட்டுள்ளது. இதில் 11வது தவணை பெற இ-கேஒய்சி செயல்முறை கட்டாயமான முறையில் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிஎம் கிசான் திட்டம்
மத்திய அரசு விவசாயிகளின் நலன் கருதி கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி அன்று பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் படி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளாக ரூ.2000 வீதம் 4 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கே செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் இதுவரை சுமார் 8.5 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இத்திட்டத்தில் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் 11 தவணை பெற விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் 11வது தவணை வழங்குவது குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் 11வது தவணையை பெற இத்திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகள் அனைவரும் தங்களின் இ-கேஒய்சி விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை வருகிற மே 1ம் தேதி வரை செய்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அத்துடன் இதனை செய்து முடிக்காதவர்களுக்கு 11வது தவணை செலுத்தப்படமாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் முறையில் செய்து முடித்து விடலாம்.
இ-கேஒய்சி சரிபார்ப்பதற்கான வழிமுறைகள்:
1. முதலாவதாக pmkisan.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இதில் இ-கேஒய்சி இணைப்பு வலது பக்கத்தில் காண்பிக்கப்படும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.
2. இப்போது ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.
3. இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும். இந்த OTP எண்ணை உள்ளிட வேண்டும்.
4. மீண்டும் ஆதார் அங்கீகாரத்திற்கான பொத்தானை கிளிக் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படுவீர்கள். இப்போது மீண்டும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு மற்றொரு 6 இலக்க OTP எண் அனுப்பப்படும்.
5. இதனையும் உள்ளிட்டு இ-கேஒய்சி வெற்றிகரமாக முடிக்கப்படும் அல்லது தவறானது என்று திரையில் காண்பிக்கப்படும்.
6. இதில் தவறு என்றிருந்தால் ஆதார் சேவை மையத்திற்கு சென்று சரி செய்ய வேண்டும்.