புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை? இரவு ஊரடங்கு அமல்? மாநில அரசுக்கு ஆலோசனை!
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொண்டாட்டங்களை தடை செய்யும் விதத்தில் கர்நாடகாவின் பெங்களூரு மற்றும் பிற நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவை விதிக்குமாறு நிபுணர்கள் குழு அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்
நாடு முழுவதும் கொரோனா 2ம் அலைத்தொற்று தாக்கம் குறைந்து வரும் சூழலில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் பாதிப்பு புதிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் முதன் முதலாக கர்நாடகா மாநிலத்தில் கண்டறியப்பட்ட இந்த ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் அம்மாநிலத்தில் மட்டும் இதுவரை 8 பேரை தாக்கி இருக்கிறது. இந்தியாவை பொருத்தளவு சுமார் 60 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதற்கிடையில் ஒமிக்ரான் நோய் தடுப்பு கட்டுப்பாடுகளாக மாநிலம் முழுவதும் கொண்டாட்டங்களை தடை செய்வது குறித்து கர்நாடகா அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஒமிக்ரான் மாறுபாடு கண்டறியப்பட்ட பெங்களூரு மற்றும் பிற அடையாளம் காணப்பட்ட நகரங்களில் 30 டிசம்பர் முதல் ஜனவரி 2 இரவு ஊரடங்கு விதிப்பது குறித்து கொரோனா தடுப்பு நிபுணர் குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அந்த வகையில் இப்பகுதிகளில் இரவு 7 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அரசு ஆலோசிக்க துவங்கி இருக்கிறது.
தமிழகத்தில் டிச.31 முதல் அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – சுற்றுலா தலங்கள் மூடல்!
அந்த வகையில் புதிய மாறுபாட்டான ஒமிக்ரான் மீதான அச்சம் அதிகரித்து வரும் நிலையில், கர்நாடக கொரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (TAC) புத்தாண்டு கொண்டாட்டங்களைக் குறைக்கப் பரிந்துரைத்துள்ளது. இதற்கிடையில் மாநிலம் முழுவதும் தினசரி சுமார் 300 வழக்குகள் மற்றும் மொத்த நேர்மறை விகிதம் (TPR) 0.4 ஆக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இப்போது பெங்களூரு மாநகரத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பெரிய மற்றும் சிறிய கூட்டங்களை தடை செய்ய நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
தவிர பப்கள், உணவகங்கள், கிளப்புகள் மற்றும் முக்கிய சாலைகள், மால்கள் மற்றும் பிற பொது இடங்களில் கொண்டாட்டங்களை அனுமதிக்கக் கூடாது என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படும் இடங்களில் 144 பிரிவு அமல்படுத்தப்படும் என்றும், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் தொற்றுநோய்கள் சட்டம் விதிக்கப்படும் என்றும் குழு கூறியுள்ளது. இந்த பரிந்துரையின் கீழ், தற்போது பெங்களூரு மாநகரம் முழுவதும் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.