தமிழக காவல்துறையில் உள்ள ஆடர்லி முறை ரத்து? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழக காவல் துறையில் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வரும் ஆடர்லி முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பலதரப்பட்ட கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் உயர்நீதிமன்றம் இது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
உயர்நீதிமன்றம்:
தமிழகத்தில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து ஆடர்லி முறை நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழக காவல் துறையில் டிஜிபி முதல் காவலர் வரை 1.20 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 5000 க்கும் மேற்பட்ட காவலர்கள் அயல் பணி என்ற அடிப்படையில் உயர் போலீஸ் அதிகாரிகள் வீட்டில் ஆடர்லியாக எடுபுடி வேலை செய்து வருகின்றனர். அதன்படி உயரதிகாரிகளின் வீட்டில் இருக்கும் உறவினர்கள் கூறும் அனைத்து வேலைகளையும் முகம் சுளிக்காமல் செய்து நற்பெயர் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
Exams Daily Mobile App Download
மேலும் உயர் அதிகாரிகள் வீட்டில் தோட்ட வேலைகள், நாய்கள் பராமரிப்பு, காய்கறி வாங்கி வருதல் உள்ளிட்ட பணிகளை ஆடர்லி காவலர்கள் செய்து வருகின்றனர். ஆடர்லி போலீஸ் முறையால் ஒரு சில தலைமுறையினருக்கு காவல் நிலைய நடைமுறைகள் தெரியாமலேயே ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த அடிமை வாழ்வில் இருந்து விடுபட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. தமிழக காவல்துறையில் காலிப் பணியிடங்கள் அதிகரித்து பணிச்சுமை ஏற்பட்டு வரும் நிலையில் ஆடர்லி போலீஸ் முறையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விகளும் காவலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதே போல் பேருந்துகளில் காவலர்கள் ‘ஓசி’ பயணம் கூடாது’ என்றும் சொந்த காரணங்களுக்காக செல்லும் போது பேருந்துகளில் டிக்கெட் எடுக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல்துறை உயரதிகாரிகள் வீட்டில் ஆடர்லியாக காவலர்களை பணியில் வைத்திருப்பதாக தகவல் வந்தாலோ அல்லது புகார்கள் வந்தோலோ நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை முதன்மை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.