தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் – பூஸ்டர் டோஸ் இலவசம்!
தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. மேலும் முகாம்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசி முகாம்:
தமிழகத்தில் சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. மேலும் தினசரி பாதிப்பு என்பது 2,500யை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பொது இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும், மேலும் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியையும் அரசு விரைப்படுத்தி வருகிறது. கொரோனாவில் இருந்து தப்பிப்பதற்கு தடுப்பூசி மட்டுமே ஆயுதம் என்பதால் இதனை தமிழக அரசு மும்முரமாக செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் கடந்த மே மாதம் 8ஆம் தேதி, கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி மற்றும் ஜூலை 10ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அந்த வகையில், 32 வது வாரமாக தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஞாயிற்றுக்கிழமையான இன்று நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு மெகா தடுப்பூசி முகாம் துவங்கியது. தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் இந்த முகாம்களில் பங்கேற்று இலவசமாக தடுப்பூசி போட்டு கொள்ள முடியும்.
தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் 2வது தவணை தடுப்பூசி செலுத்தி, 6 மாதங்கள் நிறைவடைந்தவர்கள், ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசிம் போட்டு கொள்ள முடியும். முன்னதாகவே முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில் 75வது சுதந்திர தினத்தையொட்டி செப். 28 வரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இலவச பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுவதாக மத்தியஅரசு அறிவித்துள்ளது.
இதனால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள முடியும். இந்த முகாம் மூலம் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை போடாத, 1.5 கோடி மற்றும் பூஸ்டர் டோஸ் போடாத 3.5 கோடி பேருக்கு, கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியது,‛‛தகுதியான அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட வேண்டும் என்பதில் தமிழக அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. அதற்காக, இந்த மாதத்தில் 2வது முறையாக தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. மேலும் செப்டம்பர் மாதம் 30க்குள் தகுதியான அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும்” என்றார்.