திருப்பதியில் வரலாறு காணாத அளவு குவிந்த உண்டியல் காணிக்கை – ஒரே மாதத்தில் ரூ.130 கோடி!
இந்தியாவில் தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனையடுத்து கடந்த மே மாதம் மட்டும் ரூ.130 கோடியே 29 லட்சம் காணிக்கையாக வந்துள்ளது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதங்களில் பக்தர்கள் வருகை மறுக்கப்பட்டது. அதனால் சுவாமிக்கு பூஜைகள் கோயில் வளாகத்தில் உள்ள ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்று வந்தது. திருப்பதி கோவில் இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் முக்கிய திருத்தலமாகும் இங்கு பக்தர்கள் வருகை மறுக்கப்பட்டதால் கோயில் வருமானமும் குறைந்தது. அரசின் முயற்சியால் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் முன்பதிவு அடிப்படையில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் பெருமாளை தரிசனம் செய்ய பக்தர்கள் மீண்டும் படையெடுத்து வருகின்றனர்.
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!
தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் திருப்பதிக்கு பல மாநிலங்களிலும் இருந்து பக்தர்கள் வருகை புரிவர். வழக்கமாகவே திருப்பதிக்கு பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது கூட்டம் அதிகமாக உள்ளதால் குடும்பத்துடன் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி உண்டியலில் காணிக்கையும் செலுத்தி வருகின்றனர். தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்டவைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மே மாதம் மட்டும் காணிக்கையாக ரூ.130 கோடியே 29 லட்சம் வந்துள்ளது என்று தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. ஒரு மாதத்தில் ரூ.130.29 கோடி என்பது திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் இதுவே முதல் முறையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தினசரி உண்டியல் வருமானம் என்பது சராசரியாக ரூ. 4 கோடியாக இருக்கும் பக்தர்கள் அதிகம் வரும் போது இது ரூ.5 கோடியாக அதிகரிக்கும் என்று தேவஸ்தானத்தில் செயல் அதிகாரி தர்மாரெட்டி கூறியுள்ளார்.