தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை வழங்குவது மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அரசுக்கு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பழைய ஓய்வூதிய திட்டம்
சமீப காலமாக மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பலரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதே போல தமிழகத்திலும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது மற்றும் அகவிலைப்படியை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2004ம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, தேசிய ஓய்வூதிய திட்டம் என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் போதிய அளவு பலன் கிடைக்காததால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில், சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னாக திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு காலம் ஆன நிலையில் இதுவரை ஓய்வூதிய திட்டம் குறித்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
சமீபத்தில், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாகவும், முதல்வரின் உத்தரவுப்படி இது குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கைகளை எழுப்பத் துவங்கியுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது போரட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று (ஜூன் 5) திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் உயர்நிலைப் பள்ளிக்கு முன்பாக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்குவது, சீனியாரிட்டி அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.