தீவிரமடையும் குரங்கம்மை நோய் அறிகுறிகள் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை!
தற்போது வரைக்கும் 55 நாடுகளில் குரங்கம்மை நோய் அறிகுறிகள் தென்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதன்முறையாக கேரளாவில் உள்ள ஒருவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குரங்கம்மை நோய்:
உலகம் முழுவதும் கொரோனா பரவலின் வீதம் அதிகரித்து வரும் நேரத்தில் தற்போது குரங்கம்மை நோயின் அறிகுறிகளும் பல இடங்களில் தென்படுகிறது. முதன்முறையாக ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் தான் குரங்கம்மை நோய்க்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் ஐரோப்பியா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு நாடுகளில் நோய் பரவி வருகிறது. தற்போது ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 55 நாடுகளில் குரங்கம்மை நோயின் பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் அனைவரையும் தீவிர விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரத்தில் தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த ஒருவருக்கு குரங்கம்மை நோயின் அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் அந்த பயணியுடன் வந்த இரண்டு பேருக்கும் குரங்கம்மை நோயின் அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் இவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
முதன் முதலில் கேரளாவில் குரங்கம்மை நோயின் அறிகுறிகள் தென்பட்ட காரணத்தினால் குரங்கு காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கைகளை எடுப்பதில் கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே கேரளாவில் குரங்கு காய்ச்சலை தடுப்பதற்கான பயிற்சிகள் முறையாக நடைபெற்று வருவதாகவும் இதுவரைக்கும் 1200க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை மந்திரி அறிவித்துள்ளார். மேலும், குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் வேறு எவருக்கும் இந்த நோயின் அறிகுறிகள் காணப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.