தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசின் திட்டம் என்ன? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் வீழ்ச்சியடைந்து வந்ததை கருத்தில் கொண்டு பிப். 1 முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், தேர்தலுக்கு பின்பாக மீண்டும் முழு முடக்கம் அறிவிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முழு ஊரடங்கு
தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதத்தில் தீவிரமடைந்து வந்த கொரோனா 3ம் அலைப்பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் வார இறுதியில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு, பல்வேறு அத்தியாவசியமற்ற செயல்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் மூலம் தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10,000 ஆக பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி 1 முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அத்தனையும் தளர்த்தப்பட்டது.
பிப்ரவரி 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்? மாநில அரசு விளக்கம்!
அதே போல பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் பிப்ரவரி 19ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இப்போது தேர்தலுக்கான பிரச்சாரங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், கொரோனா 3ம் அலைப் பரவல் துவங்கிய சில வாரத்திலேயே தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து விட்டதாக சொல்லி, ஊரடங்கில் இருந்து அரசு தளர்வுகளை அளித்து இப்போது தேர்தலை நடத்த ஆயத்தமாகி வருவது மக்கள் மத்தியில் சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது. இதனுடன் தேர்தலுக்காக தான் கொரோனா பாதிப்புகளை அரசு குறைத்து காட்டுகிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘கடலூர் மாவட்டத்தில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு 100 சதவீதம் என்ற அளவில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் நோய்த்தொற்று கட்டுக்குள் இருக்கிறது. கொரோனா 2ம் அலைத்தாக்கத்திற்கு பிறகு மக்கள் ஆர்வமாக தடுப்பூசி எடுக்க துவங்கி விட்டனர். இதனால் மூன்றாவது அலையின் தாக்கம் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கொரோனா வைரசை பொருத்தளவு அது வேகமாக பரவி குறையும் தன்மை கொண்டது. இதனால் நோய் பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்று மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது. அதனால். அடுத்த சில வாரங்களுக்கு மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறதா என்று கேட்டால், இதற்கும் தேர்தலுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைக்கவோ, மறைக்கவோ முடியாது.
அதனால் அரசு வெளியிட்டுள்ள முறையான வழிகாட்டு நெறிமுறையை மக்கள் பின்பற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கொரோனா 2ம் அலைப்பரவல் துவங்கியது. ஆனால் தேர்தலுக்காக ஊரடங்கு கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாமல், தேர்தல் முடிவுற்றதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதே போன்ற சூழல் தற்போதும் ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் தேர்தலுக்கு பின் மீண்டும் முழு ஊரடங்கு விதிக்கப்படுமோ என்று மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.