ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல் – ஏப்ரல் 1 முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 வரை உயர்வு!
மதுரை – செங்கோட்டை, கோவை – ஈரோடு பயணிகள் ரயில்கள் உட்பட 9 ரயில்கள் வரும் 1ம் தேதி முதல் முன்பதிவில்லா விரைவு ரயில்களாக மாற்றப்படுகின்றது. இவற்றுக்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ளது. இதை தொடர்ந்து குறைந்தபட்ச கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளது
அதிர்ச்சி தகவல் :
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் கடந்த 2 வருடங்களில் உச்சத்தை தொட்ட நிலையில் அனைத்து மாநிலங்களும் முடக்கப்பட்டு முழு ஊரடங்கிற்கு அரசால் உத்தரவு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கினர். மேலும் ரயில்கள், விமானங்கள், சாலை போக்குவரத்து என பொதுப் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டது. மத்திய அரசு, இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள், மாணவர்கள் சொந்த மாநிலங்களில் இல்லாமல் மற்ற மாநிலங்களில் சிக்கி தவிப்பவர்களை தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதி அளித்து, சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன.
தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் அமலில் இருந்த ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக நிறுத்தப்பட்ட ரயில்கள் அனைத்தும் மீண்டும் முழு அளவில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே வாரியம் கடந்த மாதம் அறிவித்தது. அதன்படி, அதி விரைவு ரயில்கள் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தெற்கு ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட 18 பயணிகள் ரயில்கள் வரும் 1ம் தேதி முதல் முன்பதிவில்லா விரைவு ரயில்களாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அடிப்படையில் மதுரை – செங்கோட்டை, கோவை – ஈரோடு, மயிலாடுதுறை – திருச்சி, நாகர்கோவில் – திருவனந்தபுரம், திருச்சி – மானாமதுரை, அரக்கோணம் – திருப்பதி, திருப்பதி – புதுச்சேரி, சூலூர் பேட்டை – நெல்லூர் மற்றும் சென்னை – சூலூர்பேட்டை ஆகிய 9 ரயில்களிலும் இரு மார்க்கத்திலும் விரைவு ரயில்களாக மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கான 10 கி மீ வரையிலான குறைந்தபட்ச கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.30 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் ரயில்வேயின் இந்த அணுகுமுறை சாமானிய மக்களுக்காக இயக்கப்படக்கூடிய ரயில்களை முற்றிலுமாக நிறுத்துவதற்கான நடவடிக்கையே என்று ரயில் பயணிகள் தெரிவித்து உள்ளனர். இந்த விலை உயர்வுக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.