தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – செப்.15 அறிக்கை தாக்கல்!
தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பது குறித்து வருகிற செப்டம்பர் 15ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்து உள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் அரசு சார்பில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. அரசுப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் எடுக்கப்பட்டது. தற்போது அரசின் துரித நடவடிக்கைகள், கொரோனா தடுப்பூசியின் பலன்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பின் காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. எனவே அரசு பல்வேறு தளர்வுகளை அமல்படுத்தி மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனையடுத்து செப்.1 முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்ததாவது, 9 முதல் 12ம் வகுப்பு வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் விபரம், வருகை பதிவு உள்ளிட்டவை குறித்து முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கூறினார். மேலும் அடுத்தகட்டமாக தொடக்க, நடுநிலை பள்ளிகள் (1 முதல் 8ம் வகுப்பு வரை) திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்குவது குறித்தும் செப்.15ம் தேதி அரசிடம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.
8 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.16,000/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !
இந்த அறிக்கையினை ஆராய்ந்து கொரோனா நோய்த்தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இறுதி முடிவெடுப்பார் என அமைச்சர் மேலும் கூறினார். தற்போது பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் 3வது அலை அச்சத்தினை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளில் தொடர் கவனம் செலுத்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர்.