இன்று முதல் பிப்.21 வரை இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!
திரிபுரா மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் அதன் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வகை பரவலினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று முதல் பிப்ரவரி 21ம் தேதி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு ஊரடங்கு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்து வருகிறது. மேலும், கொரோனா தொற்றில் இருந்து மாறுபாடு அடைந்த ஓமைக்ரான் வகை வைரஸ் பரவல் அதிக வேகத்தில் பரவும் அபாயம் கொண்டதாக மருத்துவ நிபுணர்கள் குழுவினர் எச்சரித்துள்ளனர். இதனால் நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அனைத்தும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதன் காரணமாக சற்று தொற்று பாதிப்பு குறைந்தது.
இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் மக்கள் கொரோனா நோய் தொற்று தடுப்பிற்கான வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காத காரணத்தால் நோய் பரவல் அதிகரித்தது. இதனால் மத்திய அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க அனைத்து மாநில அரசுகளையும் வலியுறுத்தியது. இதனால் தற்போது உத்தரப்பிரதேசம், மராட்டியம், கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது திரிபுரா மாநிலத்திலும் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் பிப்ரவரி 11ம் தேதியான இன்று முதல் 21ம் தேதி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், உணவகங்கள், திரையரங்குகள், அழகு நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு அரங்குகள், பொழுதுபோக்கு பூங்காவில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.