பிப்ரவரி 18 வரை 8 நகரங்களில் 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு – மாநில அரசு அறிவிப்பு!
தற்போது கொரோனா 3ம் அலைப்பரவல் பாதிப்புகள் வீழ்ச்சியடைந்து வருவதை கருத்தில் கொண்டு மாநிலத்தின் 8 முக்கிய நகரங்களில் மட்டும் இரவு ஊரடங்கு உத்தரவை தளர்த்த குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை பற்றி இப்பதிவில் காணலாம்.
இரவு ஊரடங்கு
குஜராத் மாநிலம் முழுவதும் தீவிரமடைந்து வந்த கொரோனா 3ம் அலைப் பரவல் காரணமாக விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் குஜராத்தின் எட்டு முக்கிய நகரங்களில் விதிக்கப்பட்ட இரவு ஊரடங்கு உத்தரவின் நேரத்தை அரசு தளர்த்தியுள்ளது. இது தொடர்பாக குஜராத் முதலமைச்சர் அலுவலகம் பிறப்பித்த உத்தரவில், ‘மாநிலம் முழுவதும் தற்போது அமலில் இருந்து வரும் இரவு ஊரடங்கு உத்தரவை 8 முக்கிய நகரங்களில் மட்டும் தளர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் பிப்ரவரி 18 வரை இனி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அம்மாநிலம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இதனை தொடர்ந்து மாநில அரசு கடந்த வாரத்தில், இரவு ஊரடங்கு உத்தரவை பிப்ரவரி 11ம் தேதி வரை நீட்டித்திருந்தது. அதன் படி இந்த ஊரடங்கு உத்தரவு ஒவ்வொரு நாளும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் குஜராத்தில் புதிய நோய்த்தொற்றின் வீழ்ச்சியை கருத்தில் கொண்டு 8 முக்கிய நகரங்களில் மட்டும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் குஜராத்தில் நேற்று (பிப்.10) ஒரு நாளில் 2,560 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளது. மேலும் தொற்று நோய் காரணமாக 24 இறப்புகள் பதிவாகியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.