பள்ளிகள் & அரசு அலுவலகங்கள் மூடல் – பொருளாதார நெருக்கடி எதிரொலி!
இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டுள்ள நிலையில் தனியார் வாகனங்களுக்கான எரிபொருள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
பல மாதங்களாக நாட்டை உலுக்கி கொண்டிருக்கும் கடன் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு போராடி வருவதால் இலங்கை அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், அத்தியாவசியமற்ற சேவைகளுக்கான எரிபொருள் விநியோகத்தை ஜூலை 10ம் தேதி வரை நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ள அமைச்சரவை, மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்குவரத்து நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது. அதே நேரத்தில் எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்திய அரசு, மக்கள் அனைவரையும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து அரசாங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘எங்கள் நாடு முன்னோடியில்லாத வகையில் நிதி மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொள்கிறது. அதனால் நாட்டில் துறைமுகம், சுகாதார சேவைகள், உணவு, போக்குவரத்து ஆகிய சேவைகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படும். மற்ற அனைத்து துறைகளும் இந்த கடினமான நேரத்தில் வீட்டிலேயே இருந்து ஆன்லைனில் சேவைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் அரசாங்க பாடசாலைகளையும் அரசாங்கம் மூடி இருக்கிறது. அந்த வகையில் நாடு முழுவதும் இப்போது அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மின்சாரப் பற்றாக்குறை மோசமடைந்து வருவதால், பெரும்பாலான பொருளாதார செயற்பாடுகளை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து எரிபொருளை விநியோகிக்க திட்டமிட்டு வருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.