தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை? வைரஸ் பரவல் எதிரொலி – அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் பல மாவட்டங்களில் காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி கொடுத்துள்ளார்.
பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இன்புளுயன்சா H2N2 வகை வைரஸ் கொரோனாவை போல வேகமாக பரவக் கூடியது என்பதால், அதிகமான மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் ஆகியவை தான் நோய் பாதிப்பில் இருந்து நம்மை காத்துக் கொள்ள ஒரே வழி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மார்ச் 13 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும், மார்ச் 14 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் நடைபெற்று வருகிறது. பல மாணவர்கள் காய்ச்சல் ஏற்பட்டு அத்துடன் வந்து தேர்வு எழுதுகிறார்கள். இந்நிலையில் வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் தற்போது இல்லை எனவும், வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் பதற்றமோ, பயமோ அடைய வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.