சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் அரண்டு போய் உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பே தங்கத்தின் விலையில் ஏற்றம் காணப்பட்டது என்பது குறிப்பிட வேண்டியவை. பங்குச்சந்தை சரிவு, பணவீக்கம், பொருளாதார அதிர்வுகளுக்கு இடையே தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள். இதனால் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு:
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். மேலும் அதிகமானோர் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த முதலீடு பெண்களின் எதிர்காலத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சாமானிய மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை அனைவருக்கும் அவசர பணதேவைக்கு தங்கநகைகள் தான் பெரிதும் உதவுகின்றன.
ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையானது அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யா மீதான அழுத்தமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு புறம் உக்ரைன் படைகளை எதிர்த்து போராடி வரும் ரஷ்யா, மறுபுறம் உலக நாடுகளின் தடைகளால் சற்றே பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை சந்திக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நிலவி வரும் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலையானது அதிகரித்துள்ள நிலையில், இயற்கை எரிவாயு, நிலக்கரி விலை என பலவும் தொடர்ந்து ஏற்றம் காணலாம் என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இதன் காரணமாக பணவீக்கம் என்பது மீண்டும் அதிகரிக்க வழிவகுக்கலாம்.
இது சர்வதேச மத்திய வங்கிகளை வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். இது தங்கம் விலையில் அழுத்தத்தினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையினை பொறுத்தவரையில், தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 216 உயர்ந்து ரூ.39,568-க்கு விற்பனையாகிறது. மேலும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.27 உயர்ந்து ரூ.4,946-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசு அதிகரித்து ரூ.72.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.