சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சுரேஷ் ரெய்னா கொடுத்த அப்டேட்! அடுத்த கேப்டன் இவர் தான்?
வரவிருக்கும் IPL 2022 சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா வர்ணனையாளராக களமிறங்க இருக்கும் நிலையில், CSK அணியின் அடுத்த கேப்டன் இவராக இருக்கும் என்று சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா
பல ஆண்டுகளாக இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை பிரதிநிதித்துவப்படுத்திய சிறந்த வீரர்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா. IPL போட்டிகளில் விளையாட துவங்கிய கால கட்டத்தில் இருந்து MS தோனியின் வலது கரமாகவும், நல்ல நண்பராகவும், CSK அணிக்கு ஒரு சிறந்த வீரராகவும் வலம் வந்த சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டிற்கான IPL ஏலத்தில் விற்கப்படாமல் போனார். இவரை ஏலத்தில் எடுக்க எந்தவொரு அணியும் தயாராக இல்லாத நிலையில், CSK நிர்வாகம் கூட இவரை அடிப்படை விலை கொடுத்து எடுக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது.
இதற்கிடையில், கடந்த காலங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை வழிநடத்தி வந்த கேப்டன் MS தோனியின் வயது மற்றும் அனுபவம் CSK அணிக்கு இன்னொரு கேப்டனை தேடும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. இப்போது MS தோனிக்கு பிறகு அந்த அணியை வழிநடத்துவத்தில் முக்கிய பங்கு என்று கணிக்கப்பட்டிருந்த சின்ன ‘தல’ சுரேஷ் ரெய்னா இனி CSK அணியின் ஒரு பகுதியாக இருக்கப்போவதில்லை என்றாலும், ரவீந்திர ஜடேஜா, அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா மற்றும் டுவைன் பிராவோ ஆகியோரில் ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த பொறுப்பாக இருக்கலாம் என்று சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது, ‘ரவீந்திர ஜடேஜா, அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் அணியை வழிநடத்த முடியும். அவர்கள் திறமையானவர்கள். ஆட்டத்தை நன்கு அறிந்தவர்கள் மற்றும் எம்எஸ் தோனிக்கு வாரிசாக இருக்க முடியும்’ என்று செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதில் குறிப்பாக அணியை வழிநடத்தும் திறனை ஜடேஜா கொண்டுள்ளார் என்பது பலரது கருத்தாக அமைந்திருக்கிறது. இதற்கிடையில் ஐபிஎல் போட்டிகளில் வீரராக இல்லாமல் சுரேஷ் ரெய்னா வர்ணனையாளராக அறிமுகம் ஆகும் நிகழ்வு குறித்து அவர் பேசும் போது, ‘இதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
எனது நண்பர்கள் இர்பான் பதான், ஹர்பஜன் சிங் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் ஏற்கனவே வர்ணனை செய்கிறார்கள். இந்த சீசனில் ரவி சாஸ்திரி என்னுடன் இருப்பார். அதனால் இது எனக்கு எளிதாக இருக்கும் என்று நினைக்கிறேன். என் நண்பர்களிடம் இருந்து டிப்ஸ் எடுக்க முடியும்’ என்று உற்சாகமாக குறிப்பிட்டுள்ளார். சுரேஷ் ரெய்னா இதுவரை டி20 போட்டிகளில் 6000 மற்றும் 8000 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் ஐபிஎல்லில் 5,000 ரன்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் படைத்துள்ளார். தவிர சாம்பியன்ஸ் லீக் டி20 வரலாற்றில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.