தமிழகத்தில் அதிகரிக்கும் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் – அரசின் அதிரடி நடவடிக்கை!
தமிழக ரேஷன் கடைகளில் இருந்து மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வழங்கப்படும் ரேஷன் அரிசி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், மாநில அரசு அதிரடி நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளது.
ரேஷன் அரிசி கடத்தல்:
நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும், ஏழை, எளிய மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை காக்கும் வகையிலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் இலவச உணவு தானியங்களை வழங்கி வருகிறது. அதுபோல், கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கியது முதல் கூடுதல் எடையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ரேஷன் அரிசியை கடத்தும் நிகழ்வுகள் அதிக அளவில் நடப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது.
அதாவது, ரேஷன் அரிசிக்கான தேவை இல்லாதவர்கள், அவற்றை கடைகளில் இருந்து பெற்று கள்ள சந்தையில் அதிக விலையில் விற்பனை செய்கின்றனர். லாரிகளில் ரேஷன் அரிசி கடத்தி வெளி மாநிலங்களில் விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டு உள்ளது. இதற்கான புகார்கள் எழுந்ததால், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது குறித்த அறிக்கையையும் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மூலம் தொடர்ந்து ரோந்து பணிகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், இந்த குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் மற்றும் உடந்தையாக இருப்பவர்கள் மீது தக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடத்தலுக்கு பயன்பயத்தப்படும் வாகனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என்றும், டிசம்பர் 26 ம் தேதி முதல் ஜனவரி 1 வரையிலான 1 வார கால கட்டத்தில் 68 எரிவாயு உருளை, 2104 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் ரூ.7,39,645 மதிப்புள்ள 1144 குவிண்டால் பொது விநியோகத் திட்ட அரிசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, இது சம்பந்தப்பட்ட 262 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.