தேர்தல் கமிஷன் வாகன தணிக்கையின் போது வங்கி பணத்தை உறுதி செய்ய ஏதுவாக இந்த மக்களவை தேர்தலில் கியூ ஆர் ஸ்கேனிங் முறையை செயல்படுத்த உள்ளது.
ஸ்கேனிங் ஏற்பாடு
தேர்தலில் பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. பணங்கள் கை மாறுவதை தடுப்பதற்காக பறக்கும் படை, நிலை கண்காணித்துக் குழுக்கள் என விதிமீறல்களை கண்டறிய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் உரிய ஆவணம் இன்றி 50000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்துச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. மேலும் ஏடிஎம் மையங்களில் பணங்களை வைப்பதற்காகவும், கருவூலங்களில் இருந்து வங்கிக்கும் வங்கியில் இருந்து கருவுலத்திற்கும் பணம் அனுப்பப்படுவது வழக்கம்.
தேர்தல் விதிமுறை அமலாகும்போது வங்கி பணம் எடுத்துச் செல்லும் வாகனங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். அப்படி உட்படுத்தப்படும் போது இம்முறை கியூ ஆர் ஸ்கேனிங் மூலம் பண விவரங்களை சுலபமாக உறுதி செய்யும் வழிமுறையை தேர்தல் கமிஷன் நடைமுறைப்படுத்த உள்ளது. அதாவது வங்கி சார்பில் பணம் அனுப்பப்படும் போது முழு விவரங்கள் அடங்கி க்யூ ஆர் கோடுடன் கூடிய ரசீது வாகனங்களில் கொடுத்து அனுப்பப்படும். இதை தேர்தல் பறக்கும் படை நிலை கண்காணிப்பு குழுவினர் தங்கள் ஃபோனில் உள்ள இ எஸ் எம் எஸ் செயலி மூலம் ஸ்கேன் செய்து உண்மையில் இது வங்கி பணம் தானா என்பதை உறுதி செய்ய முடியும்.
எந்த வங்கியில் இருந்து எந்த இடத்தில் உள்ள கருவூலம் அல்லது ஏடிஎம் மையத்துக்கு பணம் அனுப்பப்படுவது என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெரிந்து கொள்ளப்படும்.வங்கி பணத்தை எடுத்துச் செல்ல வாகனம் ஓட்டுனர் விவரம் முதல் கண்காணிக்க முடியும். இதன் மூலம் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் முறையை தடுக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.