அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? பிரதமர் மோடிக்கு ஆலோசனை!
நாடு முழுவதும் மீண்டுமாக ‘பழைய ஓய்வூதிய திட்டத்தை’ அமல்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தி இருக்கிறார். இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
ஓய்வூதிய திட்டம்
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) பிரதமர் நரேந்திர மோடி புதுப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். அதாவது, ராஜஸ்தான் மாநில பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு புத்துயிர் அளிப்பது குறித்த அறிவிப்பு வெளியானதையடுத்து, சத்தீஸ்கர் அரசும் இத்திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது. அதனால் இந்த முடிவுகளை கருத்தில் கொண்டு, நாட்டில் OPS அமலாக்கம் குறித்து பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.
ஏப்ரல் மாதம் 15 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
இப்போது மாநில சட்டசபையில் ராஜஸ்தான் ஒதுக்கீட்டு மசோதா (எண் 2), 2022 மற்றும் ராஜஸ்தான் நிதி மசோதா, 2022 மீதான விவாதத்திற்கு பதிலளித்த முதல்வர் அசோக் கெலாட், இந்த அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததாக கூறி இருக்கிறார். இது மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதில் சில சந்தேகங்களை எழுப்பிய பாஜக தலைவர்களுக்கு, OPS எந்த வளர்ச்சியையும் பாதிக்காது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பட்ஜெட் அறிவிப்புகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதை மாநில அரசு கவனிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட முதல்வர் கெலாட், தொடர்ந்து கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டத்திற்கு (ERCP) தேசிய அந்தஸ்து வழங்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதில் மாநில பாஜக தலைவர்களும் ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், கடன் அதிகரிப்பு குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளித்த அவர், மாநில அரசு இதுவரை 84.46 சதவீத வருவாய் இலக்கை எட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.