இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் & தளர்வுகள் அமலில் இருக்கும் மாநிலங்கள் – முழு பட்டியல் இதோ!
நாடு முழுவதும் கொரோனா பேரலை தாக்கம் தீவிரமடைந்து வந்த போது விதிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் சில மாநிலங்களில் மட்டும் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளன. இதனுடன் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருக்கும் மாநிலங்களின் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
ஊரடங்கு நீக்கம்
இந்தியாவில் கடந்த மாதம் முதல் பதிவு செய்யப்பட்டு வரும் கொரோனா வைரஸின் 3வது அலைத்தாக்கம் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் இரவு மற்றும் வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் நிமித்தம் ஒட்டுமொத்த கொரோனா தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தில் இருந்து 30 ஆயிரங்களாக குறைந்தது. அந்த வகையில் நாடு முழுவதும் கொரோனா தொற்று நோய் சூழ்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதை அடுத்து, முன்பு விதிக்கப்பட்ட பெரும்பாலான கட்டுப்பாடுகளை பல மாநிலங்கள் தளர்த்தியுள்ளன.
கோவிஷீல்டு, கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – விரைவில் கலப்பு மருந்து!
அதாவது, மாநிலங்கள் தோறும் விதிக்கப்பட்டிருந்த இரவு மற்றும் வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து அரசு சில தளர்வுகளை அளித்திருக்கிறது. என்றாலும் சில மாநிலங்களில் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய அவற்றை முழுமையாக நீக்கவில்லை. மேலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், அலுவலகங்கள் ஆகியவை மீண்டுமாக திறக்கப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்கள் இரவு நேர இயக்கம் மீதான கட்டுப்பாடுகளின் கால அளவை மட்டும் குறைத்துள்ளன. இப்போது கொரோனா வைரஸால் மாநிலங்கள் தோறும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்து விரிவாக காண்போம்.
மகாராஷ்டிரா:
முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசாங்கம், மும்பை உட்பட 11 மாநகராட்சிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இதன் மூலம், மும்பையில் இரவு நடமாட்டத்திற்கு இனி எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது. மேலும் நகரத்தில் உள்ள கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் இப்போது வழக்கமான நேரப்படி திறந்திருக்கும். தொடர்ந்து உணவகங்கள் மற்றும் திரையரங்குகளை அவற்றின் வழக்கமான நேரப்படி 50 சதவீத திறனில் தொடர்ந்து செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா:
பெங்களூருவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது. தவிர பள்ளிகள் அனைத்தும் பிப்ரவரி 14 முதல், கொரோனா பொருத்தமான நடத்தை மற்றும் நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசம்:
இம்மாநிலத்தில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருந்த இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்பட்டது. எவ்வாறாயினும், கொரோனா வைரஸ் தொடர்பான விதிமுறைகளை எல்லா நேரங்களிலும் பின்பற்ற வேண்டும் என்றும், அனைத்து பொது மற்றும் வணிக இடங்களிலும் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்றும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவுறுத்தி இருக்கிறார்.
பீகார்:
முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசாங்கம் பொது மக்கள் இரவில் நடமாடுவதற்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது. மேலும் கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடைமுறையில் இருந்த பல்வேறு தடைகளை தளர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு & காஷ்மீர்:
ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேச செயற்குழு (SEC), இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டு, படிப்படியாக கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.
சண்டிகர்:
சண்டிகர் நிர்வாகம் கடந்த வாரம் இரவு ஊரடங்கு உத்தரவை நீக்கி பள்ளிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களை பிப்ரவரி 14 முதல் மீண்டும் திறக்குமாறு அறிவித்தது. மேலும் மாநிலத்தில் நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.
ராஜஸ்தான்:
முதல்வர் அசோக் கெலாட் அரசாங்கம் தலைமையிலான ராஜஸ்தான் அரசாங்கம் இரவு ஊரடங்கு உத்தரவை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இது குறித்த சமீபத்திய உத்தரவு ஒன்றில், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருந்த இரவு ஊரடங்கு உத்தரவு முடிவடையும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அசாம்:
இம்மாநிலத்தில் பிப்ரவரி 15 முதல், தினசரி இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருந்த இரவு ஊரடங்கு உத்தரவை நீக்க ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான அரசு முடிவு செய்தது.
மேற்கு வங்கம்:
மேற்கு வங்கத்தில் பிப்ரவரி 28ம் தேதி நள்ளிரவு முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும். இருப்பினும், கொரோனா வைரஸ் தொற்று நிலைமையின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, பல கட்டுப்பாடுகளை திருத்தி, அனைத்து தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளையும் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன் படி இன்று அதாவது பிப்ரவரி 16 முதல் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது.
டெல்லி:
தேசிய தலைநகரில் தற்போது இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பிப்ரவரி 4 அன்று நடந்த DDMA கூட்டத்தில், இரவு ஊரடங்கு உத்தரவு நேரம் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை குறைக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியிலும் அத்தியாவசியமற்ற கடைகள் இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை பிப்ரவரி 7 முதல் திறக்கவும், நர்சரி முதல் 8 ஆம் வகுப்பு வரை பிப்ரவரி 14 முதல் பள்ளிகளை திறக்கவும் அரசாங்கம் அனுமதி அளித்தது.
உத்தரப்பிரதேசம்:
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்திர பிரதேச அரசு இப்போது இரவு ஊரடங்கு சட்டத்தை ஒரு மணி நேரம் தளர்த்தியுள்ளது. முன்னதாக இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இருந்த இரவு ஊரடங்கு உத்தரவுக்கு பதிலாக இனி இரவு 11 மணி முதல் காலை 6 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மாநில அரசு தனது உத்தரவில் கூறியுள்ளது. மேலும் பிப்ரவரி 14 முதல், நர்சரி முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது. தவிர தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் முழு அளவில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குஜராத்:
அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், பாவ்நகர், ஜாம்நகர், ஜூனாகத் மற்றும் காந்திநகர் ஆகிய எட்டு முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவை குஜராத் அரசு தளர்த்தியுள்ளது. பிப்ரவரி 11 முதல் 18 வரை, இந்த எட்டு நகரங்களிலும் நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஒடிசா:
முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா அரசாங்கம் மாநிலத்தில் பல கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. ஆனால் நகர்ப்புறங்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.