தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதிய விதிமுறை – NOTA & விவி பேட் முறை நீக்கம்!
தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நோட்டா விருப்பம் மற்றும் வாக்களித்த விவரங்களை பற்றி அறியும் விவி பேட் கருவியும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விளக்கங்களை இப்பதிவில் காணலாம்.
புதிய விதிமுறை
தமிழகம் முழுவதுமுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு இன்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் 1,374 மாநகராட்சி கவுன்சிலர்கள், 3,843 நகராட்சி கவுன்சிலர்கள், 7,621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவிகளுக்கு 57,778 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் (பிப்.18) முடிவடைந்த நிலையில், இன்று வாக்குப்பதிவு நடைபெற்று, வரும் பிப்ரவரி 22ம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட இருக்கிறது.
பொதுவாக தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தும் போது விருப்பமான கட்சியை தேர்ந்தெடுக்கும் வகையில் கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஒரு வாக்காளர் அந்த வாக்கு இயந்திரத்தில் உள்ள எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத பட்சத்தில், நோட்டா (NOTA) என்ற ஆப்ஷனை கொடுத்து தங்களது வாக்குகளை செலுத்தலாம். இந்த நோட்டா வாக்குகள் செல்லுபடியாகாத வாக்குகள் ஆகும்.
அந்த வகையில் முதன் முதலாக கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற வாக்குப்பதிவின் போது இந்த நோட்டா ஆப்ஷன் செயல்முறைப்படுத்தப்பட்டது. இது தவிர வாக்கு இயந்திரத்தில் ஒருவர் தனது வாக்குகளை செலுத்திய பிற்பாடு அவர் வாக்களித்த சின்னம், வேட்பாளர் பெயர் ஆகியவை விவி பேட் கருவியில் தோன்றும். இந்த 2 செயல்முறைகளும் தற்போது நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, தமிழகத்தில் தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் இந்த செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு தேர்தல் முடிவடைய வேண்டும் என்பதால் அரசு, நோட்டா மற்றும் விவி பேட் கருவியை நீக்கி இருப்பதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்க விரும்புபவர்கள் வாக்குச்சாவடியில் உள்ள தேர்தல் அதிகாரியிடம், 17 -B என்ற விண்ணப்பத்தை பெற்று நோட்டாவுக்கான தங்களது வாக்குகளை எழுதிக் கொடுக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.