புதிய கல்விக் கொள்கை சாத்தியமா? ஆசிரியர்கள் சங்கத்தினரின் கருத்து!
ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள கல்லூரிகளில் தற்போது முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த நிலையில் தேசிய கல்வி கொள்கையை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆசிரியர்கள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.
புதிய கல்விக்கொள்கை:
இந்தியாவில் 1992 ம் ஆண்டிற்கு பிறகு கடந்த 2020ம் ஆண்டு கல்விக்கொள்கை திருத்தம் செய்யப்பட்டு புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையடுத்து மாநில அரசுகள் இதனை அமல்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிலையில் அகில இந்திய பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியர் அமைப்புகளின் கூட்டமைப்பு ஹிமாச்சல பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என 2000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். வரும் 19ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று மாநாட்டில் புதிய கல்விக்கொள்கையை நடைமுறைபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக ஆசிரியர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
மேலும் கல்லூரி முதல்வர்கள் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் மாநிலத்தில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது சாத்தியமற்றது என்று ஆசிரியர்கள் சங்கத்தினர் கூறுகின்றனர். மேலும் புதிய கல்விக்கொள்கையை ஹிமாச்சல பிரதேசத்தில் அமல்படுத்த கூடுதலாக 500 பேராசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.