திருப்பதி போல் இனி திருச்செந்தூரிலும் புதிய வசதிகள் – அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு!
திருப்பதி கோயிலைப் போன்று திருச்செந்தூர் கோவிலிலும் 200 கோடி ரூபாய் செலவில் திருச்செந்தூர் கோவிலில் உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதனால் பக்தர்கள் அதிக அளவில் மகிழ்ச்சியில் உள்ளனர்.
திருப்பதி போல் இனி திருச்செந்தூர்:
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விழா காலங்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் கோடையை முன்னிட்டு, தமிழகத்தில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டதால், கடந்த சில நாட்களாக கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார்.
நாட்டில் மீண்டும் அமலாகுமா முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அரசின் முடிவு இது தான்!
அப்போது அவர் திருச்செந்தூர் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்களும், யாத்ரீகர்களும் ஆண்டு முழுவதும் வருகிறார்கள். எனவே குடிநீர், கழிவறை, தங்கும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் விரைவாக செய்து முடிக்கப்படும். மேலும் பக்தர்கள் தங்கும் வசதிக்காக யாத்திரி நிவாஸ் கட்டப்படுகிறது. அதன் முகப்பு வடிவம் சாதாரணமாக இருக்கிறது. அதை பிரமாண்டமாக வடிவமைக்க கூறி இருக்கிறேன். திருச்செந்தூர் புகழை நாடு முழுவதும் கொண்டு சேர்க்க திருப்பதிக்கு இணையாக மேம்படுத்துவதற்காக மாஸ்டர் பிளான் தயாரிக்கவும் அறிவுறுத்தி இருக்கிறேன் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சென்னை காலடிப்பேட்டையில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான கல்யாண வரதராஜர் பெருமாள் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது ‘திருச்செந்தூருக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதால் 200 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பதி கோவிலுக்கு நிகராக திருச்செந்தூர் கோயிலின் உட்கட்டமைப்புகள் உருவாக்கப்படும். ஒரே நேரத்தில் 5000 பக்தர்கள் வந்தால் கூட பிரத்யேக வசதி ஏற்படுத்தி அவர்களை வரிசையாக அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்படும். மேலும் திருச்செந்தூர் கோவிலில் மட்டுமின்றி திருத்தணி, சமயபுரம், ராமேஸ்வரம், பழனி போன்ற ஊர்களில் உள்ள திருக்கோவில்களிலும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்’ என அவர் தெரிவித்துள்ளார்.